கிரிக்கெட்
3வது ஒருநாள் போட்டி: இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரு ஒருநாள் போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், தொடரை வெல்லும் அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இந்தப் போட்டி இருந்தது. மேலும், கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், ரசிகர்கள் கூட்டமும் அலைமோதியது.
3வது ஒருநாள் போட்டி
3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன்படி ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
இந்தத் தொடரில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் களமிறங்கிய 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சூர்யகுமார் யாதவ். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியா முதலிடம்
இந்த தொடருக்கு முன்னதாக ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில், ஆஸ்திரேலியா அணி 2வது இடத்தில் இருந்தது. இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இரு அணிகளும் தலா 113 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், தசம புள்ளிகளின் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.