இந்தியா
எடியூரப்பாவின் முதல்வர் கனவுக்கு ஆப்பு வைப்பாரா ஜெகதீஷ் ஷெட்டர்!

கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் யார் முதல்வராக வர உள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தம் பதிவாகிய 204 வாக்குகளில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கர்நாடக அரசு கவிழ்ந்தது. குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதனையடுத்து அடுத்த அரசு பதவியேற்கும் வரை முதலமைச்சராக தொடரும்படி குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் அடுத்த முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிருப்தி எம்எல்ஏக்களின் முழு ஆதரவை பெற்றுவிட்டு ஆட்சி அமைக்கலாம் என்று பாஜக தலைமை விரும்புவதால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அவரது ஆதரவாளர்களுடன் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜெகதீஷ் ஷெட்டரின் இந்த டெல்லி விசிட்டால் எடியூரப்பா தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக சில தினங்களுக்கு முன்னர் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் பேசிபோது, எடியூரப்பா தலைவராக இருந்தாலும், அவர் தனக்கான ஆதரவை நிரூபிக்க வேண்டும். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.






















