தமிழ்நாடு
பாஜகவிடம் விலைபோன பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடர்வோம்? திராவிட கழகம் புகார்!

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வரும் சூழலில் அவர் பாஜகவிடம் விலைபோய்விட்டதாக திராவிட கழக துணைத்தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

#image_title
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், சர்வதேச சூழலும், இலங்கையின் ராஜபக்ஷே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசிய தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார் என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தமிழகம் மற்றும் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த வழக்கறிஞரும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் துணைத்தலைவருமான துரைசாமி, இறுதிப்போரில் வீர மரணமடைந்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதே நல்ல எண்ணத்தில் சொல்லப்படவில்லை.
யாழ்பாணம் சென்ற பாஜகவின் அண்ணாமலையும் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்று சொல்கிறார். இதில் ஏதோ சதி உள்ளது. பாஜக, மத்திய உளவுப்பிரிவு இதன் பின்னணியில் உள்ளார்கள். பிரபாகரன் பெயரை கெடுக்க பாஜகவின் சதி அரசியல் இதன் பின்னணியில் உள்ளது. திராவிட கழகத்திற்கு எதிரான பழ.நெடுமாறன் இப்போது பாஜகவிடம் லாபத்தை எதிர்பார்த்து விலைபோய்விட்டார். சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடர்வோம். விரல் ரேகை அடிப்படையில் பிரபாகரன் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.



















