இந்தியா
சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சங்கம் சமீபத்தில் நாடு தழுவிய போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகம் முழுவதும் சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் ரூபாய் 5 முதல் 30 ரூபாய் வரை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் இந்த புதிய கட்டணம் அமல் ஆனது என்பதால் பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஏற்கனவே மத்திய அரசுக்கு பல்வேறு அதிருப்திகள் இருந்து வரும் நிலையில் தற்போது சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி இருப்பது பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
















