தமிழ்நாடு
அதிகாலை 6 மணிக்கே குவிந்த வாக்காளர்கள்: சில நிமிடங்களில் வாக்குப்பதிவு தொடக்கம்!

தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அதிகாலை 6 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இன்று தமிழகம், புதுவை மற்றும் கேரள சட்டசபை தேர்தலுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் மற்றும் கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்தவரை 234 தொகுதிகளில் மொத்தம் 3998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் 88 ஆயிரத்து 957 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் 140 தொகுதிகளில் 2,67,88,000 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனவால் பாதிப்பு அடைந்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
மேலும் பூத் சிலிப் கட்டாயம் தேவை இல்லை என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டுவந்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் அச்சமின்றி பொது மக்கள் வாக்களிக்கலாம் என்றும் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் எனவே எந்தவித பயமுமின்றி அனைவரும் வாக்களிக்கவேண்டும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.





















