தமிழ்நாடு
மோடியை புகழ்ந்து தள்ளிய ரஜினி: விளாசிய திருமாவளவன்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாடுமுழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி இந்தியா டுடே இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு பதில்களை தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியில் பிரதமர் மோடியை ரஜினி புகழ்ந்து தள்ளியுள்ளார். ஏற்கனவே ரஜினியை பாஜக அபிமானி என கூறிவரும் நிலையில் அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளது மேலும் ஊர்ஜிதமாகியுள்ளது. ரஜினி தனது பேட்டியில், பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமானவற்றையும் சிறந்தவற்றையும் செய்ய முயற்சி செய்கிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், இந்தியாவிலுள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காகத்தான் பிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிறார்.
அவர்களுக்காகத்தான் பிரதமர் மோடி ஓடிஓடி உழைக்கிறார். நாட்டு மக்களின் வறுமை போகவில்லை, ஊழல் ஒழியவில்லை, கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை. சாதி, மத வெறியர்கள் வெறிக்கூத்தாடுகின்றனர். ஆக, மோடி யாருக்கு உழைக்கிறார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும் என்றார் அதிரடியாக.















