தமிழ்நாடு
முக ஸ்டாலினை சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள்: தியேட்டரை திறக்க அனுமதி உண்டா?

தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதற்கான அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக இந்த பதவியேற்பு விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் முக ஸ்டாலின் அவர்களுடைய இல்லத்தில் சந்தித்தனர்.
நாளை மறுநாள் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஐட்ரீம் மூர்த்தி, டாக்டர் ஹரிகோவிந்த், மதிவானன், திரு. படுர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் ஐட்ரீம் மூர்த்தி என்பவர் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் ராயபுரம் தொகுதியில் அவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




















