இந்தியா
கடும் டிராபிக் நெருக்கடி.. தேசிய நெடுஞ்சாலையில் 2 கிமீ ஓடிய தேர்வு எழுதும் மாணவிகள்..!
கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மாணவிகள் பொது தேர்வு எழுதும் அறைக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒவ்வொரு மாணவ மாணவியர்களுக்கும் பொது தேர்வு என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்பதும் அந்த பொது தேர்வை மிஸ் செய்யாமல் எழுத வேண்டியது ஒவ்வொரு மாணவர்களின் கடமை என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பொது தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் பொதுத்தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் போக்குவரத்து பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நின்று விட்டதால் தேர்வு நேரம் நெருங்கியதால் மாணவிகள் பதட்டம் அடைந்தனர்.
மாணவிகள் தங்கள் தேர்வு மையத்தை நோக்கி சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலையில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் குறித்தும் டிராபிக் குறைபாடுகள் குறித்தும் நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை 2 பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறித்து கடந்த ஒரு வாரமாக புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பொது தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு எந்த விதமான வசதியும் செய்து தரவில்லை என கல்வித்துறை மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர் மாணவிகளை மன அழுத்தத்திற்கு ஏற்படும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.