தமிழ்நாடு
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்: 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனை!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக அளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.45% பேரும், மாணவிகள் 96.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
600/600
பிளஸ்-2 பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப் பதிவியல், கணினிப் பயன்பாடு என அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி நந்தினி, திண்டுக்கல் நகரில் இருக்கும் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவி நந்தினி கூறுகையில்
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் தான் அனைத்துப் பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுக்க முடிந்தது. பெற்றோர் என் மீது எந்தவித திணிப்பையும் ஏற்படுத்தியது இல்லை. நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியம் ஆகும். ஆடிட்டராக வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதற்கான மேற்படிப்புகளை படிக்க உள்ளேன் என மாணவி நந்தினி கூறினார்.