இந்தியா
ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு: என்னென்ன தாக்கம் ஏற்படும்?
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்று முன் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்தார். இதனை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 4.40 இலிருந்து 4.90 ஆக உயர்ந்துள்ளது
ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அவ்வப்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகித மாற்றம் காரணமாக வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் உயரும் என்பதால் கூடுதல் தொகையை அவர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதுகுறித்து கூறியபோது, ‘’உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றும், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாகவும், இருப்பினும் இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்றும் கூறினார்.