தமிழ்நாடு
வைரலான புகைப்பட பாட்டிக்கு மாதம் ரூ.2000: பாராட்டு பெற்ற புகைப்பட கலைஞர் தகவல்!

தமிழக அரசு சமீபத்தில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது என்பதும் அந்த பணத்தை வழங்கிய முதல் நாளில் புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி என்பவர் 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்களை பெற்ற பாட்டி ஒருவரை புகைப்படம் எடுத்தார் என்பது தெரிந்ததே.
இந்த புகைப்படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வைரல் ஆனது என்பதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞரை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்த செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக வெளிவந்து புகைப்பட கலைஞருக்கு பாராட்டு குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனக்கு பாராட்டு கிடைக்க காரணமாக இருந்த பாட்டிக்கு மாதம் மாதம் ரூபாய் இரண்டாயிரம் கொடுத்து உதவப் போவதாக புகைப்படக்கலைஞர் ஜாக்சன் ஹெர்பி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பாட்டியை நேரில் சென்று சந்தித்து அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளங்கபடமில்லாத பொக்கைவாய் சிரிப்புடன் போஸ் கொடுத்த அந்த பாட்டிக்கு தற்போது மாதம் ரூ 2000 கிடைக்க இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.






















