செய்திகள்
பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு போராளிகளுக்கு தவெக விஜய் நேரில் சென்று ஆதரவு-போராட்ட அரசியல் சூடுபிடிக்கிறது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்துார், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி 5100 ஏக்கர் பரப்பளவில் பரந்துார் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நிலம் எடுப்பு தொடர்பான அரசாணைகள் வெளியாகி உள்ளன. நீர்வளத்துறை அதிகாரிகள் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணியிலும் வருவாய்த் துறையினர் வீடுகளை அளவிடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் பரந்துார் விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களின் போராட்டம் 900 ஆவது நாளை எட்டியுள்ளது.
சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் இந்த விமான நிலைய பணிகளுக்கு நிலம் எடுப்பதை உடனடியாக நிறுத்தக் கோரி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நிலம் கையகப்படுத்தப்பட்டால் 13 கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அணைவரும் ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை விட்டே வெளியேறி விடுவோம் என்றும் மிரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இம்மாதத்தில் வரும் 19 மற்றும் 20 தேதிகளில் தவெக வலைவர் விஜய் போராட்டக் காரர்களை சந்தித்து ஆதரவுக் கரம் நீட்டி பேச உள்ளார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இன்னமும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து உரிய அனுமதி கிடைக்கப்பெறவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கிடையில் தவெக நிர்வாகிகள் பரந்துார் சென்று போராட்டக் காரர்களை சந்தித்து பேசி உள்ளனர். விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் தொடர்பான விவரங்களை பெற்றுள்ளனர். இந்த விவரங்களை தலைவர் விஜயிடம் அளிக்க உள்ளனர்.
இதற்கிடையில் தலைவர் விஜய்க்கு பரந்துார் செல்ல அனுமதி கிடைக்காததால் நிர்வாகிகள் சென்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அரசிடம் உரிய அனுமதி பெற்று தலைவர் போராட்டக்காரர்களை சந்திப்பார் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
போராட்ட அரசியல் சூடுபிடிக்கிறது… இனி வரும் நாள்களில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.














