செய்திகள்
மே 4 டாஸ்மாக் விடுமுறை: வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடல்!
Published
1 மணி நேரம் agoon
By
Poovizhi
தமிழகத்தில் நாளை (மே 4) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது அந்த வாக்குகள் அனைத்தும் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படும். ஒவ்வொரு சுற்று முடிவுகளும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இதனையொட்டி எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற கிளப்புகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி கடைகளை திறந்து செயல்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினசரி ரூ.100 கோடிக்கும் அதிகமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மிலாடி நபி, உழைப்பாளர் தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அண்மையில் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மீண்டும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணிக்காக மாநிலம் முழுவதும் 10,545க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,624 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














