செய்திகள்
தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
Published
1 மணி நேரம் agoon
By
Poovizhi
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட உள்ளன.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போகும் கட்சி எது என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் அதிகரித்துள்ளது. இதற்கான பதிலை வழங்கும் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் ஒலிபெருக்கி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மேலும், தேர்தல் முடிவுகளை ‘இ.சி.ஐ. நெட்’ செயலி மற்றும் results.eci.gov.in இணையதளம் மூலமாகவும் பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. இந்த பணிக்காக மாநிலம் முழுவதும் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் முடிவுகளை வெளியிடும் செயல்முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கும் பங்கேற்றார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.













