இந்தியா
பாஜக தலைமையில் மாற்றமில்லை: விதிகளை மீறி அமித்ஷாவே தலைவராக தொடர்வார்!
பாஜகவின் தேசிய தலைவராக உள்ள அமித் ஷா மாற்றப்பட்டு வேறு தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷாவே தலைவராக தொடர்வார் என்ற தகவல் பாஜக வட்டாரத்தில் இருந்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த புதிய ஆட்சியில் அமித் ஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக உள்ளார் அமித் ஷா. இதனையடுத்து பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்னும் விதி உள்ளதால் தற்போது தலைவராக உள்ள அமித் ஷாவுக்கு பதிலாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள், தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து இந்த கூட்டத்தில் தமிழிசை, எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்றதில் அமித் ஷாவுக்கு முக்கிய பங்கு உள்ளதால் அவரே தலைவராக தொடர வேண்டும் என்று மாநிலத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.