கிரிக்கெட்
வீணானது வெங்கடேஷ் அய்யரின் அதிரடி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

16 வது ஐபிஎல் தொடரில் இன்றைய முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசு தீர்மானித்தது. இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 8 ரன்கள், ஜெகதீசன் ரன் ஏதுமின்றியும் அவுட் ஆனார்கள்.
வெங்கடேஷ் அய்யர் சதம் விளாசல்
அடுத்து வந்த கேப்டன் ராணா 5 ரன்கள் மற்றும் ஷர்துல் தாகூர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர் 49 பந்துகளை சந்தித்து சதம் அடித்து அசத்தினார். கொல்கத்தா அணிக்காக 2008 ஆம் ஆண்டில் சதம் அடித்த பிரண்டன் மெக்கல்லத்திற்கு பிறகு சதம் அடித்த இரண்டாம் வீரரானார் வெங்கடேஷ் அய்யர்.
மும்பை வெற்றி
வெங்கடேஷ் அய்யர் 104 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும், இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மாவும் களம் கண்டனர். ரோகித் சர்மா 20 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 58 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த திலக் வர்மா 25 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் மும்பை அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் எடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 2 வது வெற்றியை பதிவு செய்தது.