இந்தியா
உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: மோடிக்கு கடிதம் எழுதி ஒன்றிய அரசை வறுத்தெடுத்த மம்தா!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோ மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், அதைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் மனசாட்சியற்ற விலையேற்றமானது எளிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மே மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 8 முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 6 முறை உயர்ந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைத்து, மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் செஸ் வரியானது தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. அதன் மூலம் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான 42 சதவீத வரி மறுக்கப்பட்டு வருகிறது. இதை சரி செய்து கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை மாற்றுங்கள்’ என்று காட்டமாக கூறியுள்ளார்.
வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது.