தமிழ்நாடு
ஒன்றிய அரசு என சொல்வதற்கு தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசு என்று கூறுவது பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வரும் மற்ற அரசியல் தலைவர்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்று கூறுவதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒன்றிய அரசு என அழைப்பதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வோம் என பாஜகவினர் ஏற்கனவே கூறிய நிலையில் அதன் நிலைப்பாட்டிற்கு தற்போது பலத்த அடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம், அழைத்துக் கொண்டே இருப்போம் என்று உறுதிபட கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.




















