தமிழ்நாடு
அதிமுக, பாஜகவின் தொகுதிக்கு 50 கோடி திட்டம்: காங்கிரஸ் பகீர்!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. இதில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரேயடியாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணியாக சந்திக்கிறது.
அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாகர்கோவில் வந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தார். இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்த தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த பணம் ஆங்காங்கே கொண்டுபோய் வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பணம் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் புழங்குமானால் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய முடியும். சிறிய கட்சிகள், ஏழைக்கட்சிகள் என்ன செய்ய முடியும். இது பகல்கொள்ளை என குற்றம் சாட்டினார்.
மேலும், தேர்தலில் தேர்தல் ஆணையமும், இந்திய ஜனநாயகமும் இந்த பணப்புழக்கத்தினால் தோல்வி அடைகிறது. தபால் ஓட்டுக்கு கூட அமைச்சர் ஒருவர் பேரம் பேசும் அளவுக்கு மோசமான சூழ்நிலை உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. தமிழகத்தில் பணத்தின்மூலம் தான் தேர்தல் நடைபெறுகிறது என்பது உலகமே அறிந்த விஷயம் என கூறினார் கே.எஸ்.அழகிரி.



















