தமிழ்நாடு
பாஜகவினர் தாக்கிய செருப்பு கடைக்கு சென்ற கமல்: என்ன செய்தார் தெரியுமா?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார் என்பதும், அவரும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனுக்கு எதிராக பாஜகவில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். இருவருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று வானதி ஸ்ரீனிவாசனுக்கு வாக்கு சேகரிக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவைக்கு வருகை தந்தார். அப்போது பாஜகவினர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ஒரு சில கடைகளில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட கடைகளில் ஒன்று செருப்பு கடை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கோவையில் பாஜகவினர் கல் வீசி தாக்கிய செருப்பு கடைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்றார். அங்கே அவர் புதிய செருப்பு வாங்கியதாகவும் கடை உரிமையாளர் உடன் சிறிது நேரம் பேசியதாகவும் கல்வீசி தாக்குதல் குறித்து கேட்டு அறிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கமலஹாசன் செருப்பு வாங்கிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.