தமிழ்நாடு
வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்கிறார் – பாஜகவை விளாசிய கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை இப்போது தான் சந்திக்கிறது. மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முதல் முறையாக கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் களம் கண்டுள்ளார். இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தன் மகள்களுடன் சென்னையில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களித்தார் கமல். தொடர்ந்து அங்கிருந்து தன் சொந்த தொகுதியான கோவை தெற்கிற்கு சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சில திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார்.
‘கோவையில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்கு செலுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் கோவை தெற்குத் தொகுதியில் டோக்கன் முறையில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் மக்களுக்குப் பெருமளவு பணம் கொடுத்து வருகிறார்கள். அது குறித்தான டோக்கன் பற்றிய புகைப்படங்களைப் பார்த்தேன்’ என்று கூறியுள்ளார்.




















