பர்சனல் பைனான்ஸ்
அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு கார், பைக் தேவையா? எவ்வளவு பணம் மிச்சப்படும் தெரியுமா?
பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகம் செல்வதற்கு கார் அல்லது பைக்கை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த இரண்டை பயன்படுத்தாமல் பொது வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது பொருளாதார ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
ஒரு நபருக்கு வேலை கிடைத்தவுடன் அலுவலகம் செல்வதற்கு கார் அல்லது பைக்கை வாங்குவது என்பது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. மிக எளிதில் கார் லோன் மற்றும் பைக் லோன் கிடைப்பதை அடுத்து அனைவரும் லோன் வாங்கி பைக் அல்லது காரை வாங்குகின்றனர். இதன் காரணமாக உங்களுக்கு எவ்வளவு செலவு அதிகமாகும் என்பதை தற்போது பார்ப்போம்.
கார் அல்லது பைக் வைத்திருந்தால் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் செலவு செய்ய வேண்டும். மேலும் வாகனங்களின் பராமரிப்பு செலவு, நம்முடைய வாகனத்தை வேறு யாரேனும் பயன்படுத்தினால் அதற்குண்டான செலவு, இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு வகை செலவுகள் இருக்கும். மேலும் லோன் வாங்கி வாகனம் வாங்கியிருந்தால் ஒவ்வொரு மாதமும் தவணை கட்ட வேண்டும்.
ஆனால் கார் அல்லது பைக்கில் செல்வதற்கு பதிலாக பொதுவாகனத்தை பயன்படுத்தினால் குறிப்பாக மெட்ரோ ரயில் போன்ற வாகனத்தை பயன்படுத்தினால் சவுகரியமான பயணம், நேரத்துக்கு பயணம், மற்றும் குறைந்த செலவில் நாம் அலுவலகம் சென்று விடலாம் என்பதே பொருளாதார ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் இருப்பவர்கள் பைக் அவசியம் தேவை என்றால் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம், அதில் தவறு இல்லை. ஆனால் அவ்வாறு பைக் வாங்குபவர்களும் அதை முறையாக பராமரித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அதிக வேகத்தில் ஓட்டாமல் நிதானமான வேகத்தில் ஓட்டினால் எரிபொருள் செலவும் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்து கணிப்பின்படி 25கிமீ வரை தூரத்தில் உள்ள அலுவலகம் செல்வதற்கு கார் அல்லது பைக்கில் செல்வதற்கு பதிலாக பொதுவாகனத்தை பயன்படுத்தினால் ஒரு வருடத்திற்கு சுமார் 50,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என்று கூறியுள்ளது.
மெட்ரோ நிலையம் அல்லது பேருந்து நிலையம் கொஞ்சம் தூரமாக இருந்தால் வீட்டில் இருந்து அந்த இடத்தில் செல்வதற்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்லலாம். ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே நீங்கள் வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என்பதும் முக்கியம். இது நமது உற்சாகத்தை அதிகரிக்கும் என்பது மட்டுமின்றி உடல் நலத்திற்கும் நல்லதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிந்தவரை கார் அல்லது பைக்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அது நம்முடைய பணத்தை மிச்சப்படுத்துவது மட்டும் இன்றி நாட்டிற்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் ஒரு அம்சமாகவும் இருக்கும்.
ஒருவேளை நமது நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் நம் பக்கத்து வீட்டில் இருந்தால், அவர்கள் கார் வைத்திருந்தால் அதில் நாம் ஷேர் செய்து கொள்ளலாம். அவர் செலவு செய்யும் பெட்ரோல் அல்லது டீசல் விலையில் பாதியை நாம் கொடுத்து அவருடைய அனுமதியுடன் அவருடைய காரிலேயே அவருடன் அலுவலம் சென்றாலும் செலவுகளை மிச்சப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் நாட்டில் டிராபிக் பிரச்சனை குறைய, சுற்றுச்சூழல் பிரச்சனை நீங்க, நம்முடைய சொந்த பணமும் கையை விட்டு போகாமல் இருக்க, கார் அல்லது பைக் போன்ற சொந்த வாகனம் வாங்குவதைவிட பொதுவாகனத்தில் செல்வது தான் புத்திசாலித்தனம் என பொருளாதார அறிஞர்கள் கருத்து கூறியுள்ளனர்.