உலகம்
பாகிஸ்தானில் இருந்து வெளியேறுகிறதா ஹோண்டா? அதிரடி அறிவிப்பு..!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் பெட்ரோல், டீசல், கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டை திவால் ஆகவிடாமல் தடுப்பதற்காக சீனா மற்றும் ஐ.எம்.எப் உதவி செய்தாலும் அந்நாட்டின் மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய பாகிஸ்தான அரசால் முடியவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹோண்டா நிறுவனம் திடீரென தனது ஆலையை தற்காலிகமாக மூட இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் கார் அசெம்பளி ஆலையை நடத்தி வருகிறது .பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து இன்று முதல் அதாவது மார்ச் 9 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக பாகிஸ்தானில் உள்ள ஹோண்டா அட்லஸ் கார் நிறுவனம் மூடப்படும் என்று அந்நாட்டின் தொழில்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை இதே போன்று நீடித்தால் நிரந்தரமாக மூடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுசுகி மோட்டார் கம்பெனி மற்றும் டொயோட்டாவின் மோட்டார் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனமும் மூடி உள்ளதை அடுத்து உற்பத்தி குறைவு மட்டும் இன்றி அந்நாட்டின் வேலை வாய்ப்பின்மையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.