இந்தியா
ரயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் வருகிறது கட்டணம் சலுகை.. ஆனால் ஒரு கண்டிஷன்?
இந்தியன் ரயில்வே மூத்த குடிமக்கள் டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில்வே நிர்வாகம் மீண்டும் மூத்த குடிமக்களுக்குக் கட்டணம் சலுகையை வழங்க முடிவு செய்து இருந்தாலும், அதன் விதிகளில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு, எல்லா வகுப்புகளுக்கும் தற்போது உள்ள சலுகையைக் குறிப்பிட்ட சில வகுப்பு டிக்கெட்டிற்கு மட்டும் என மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்ய உள்ளதாகக் கூறுகின்றனர்.
மூத்த குடிமக்கள் வயது வரம்பை 60 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தாலாம் எனவும், ஜெனரல் மற்றும் ஸ்லீப்பர் டிக்கெட்களுக்கு மட்டும் சலுகை வழங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்பு வரலாம் என்கின்றனர்.
முன்னதாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முன்பு வரை பெண் பயணிகளுக்கு 58 வயது இருந்தால் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயது எனில் மூத்த குடிமக்களுக்கான 40 சதவீத கட்டணம் சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்றுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட இந்த கட்டணம் சலுகை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.