இந்தியா
உஷார்.. ரயிலில் இரவு 10 மணிக்கு மேல் இதற்கு எல்லாம் அனுமதியில்லை!

இரவு நேரங்களில் ரயில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தங்களுடன் பயணிக்கும் பயணிகள் எந்த வகையில் பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி இனி ரயில் இரவு 10 மணிக்கு மேல் மொபைல் பொனில் சத்தமாகப் பாட்டுக் கேட்கக் கூடாது. வேண்டும் என்றால் ஹெட் போன் போட்டுக்கொள்ளலாம். மேலும் அதிக சத்தமாக போனில் பேசக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில்களில் தினமும் லட்சம் கணக்கானவர்கள் பயணிக்கும் நிலையில் அவர்களுக்கு இந்தியன் ரயிவேஸ் கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
புதிய விதிகள் என்ன?
1) இரவு 10 மணிக்கு மேல் எந்த ஒரு பயணியும் தங்களது போனில் சத்தமாகப் பேசக் கூடாது.
2) அதிக சத்தத்துடன் பாட்டு கேட்கக் கூடாது. தேவையென்றால் ஹெட்-போன் போட்டுக்கொண்டு பாட்டுக் கேட்கலாம்.
3) 10 மணி மேல் மின் விளக்குகளை அணைத்துவிடவேண்டும். இரவு நேர விளக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
4) இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர், டிக்கெட்களை சரிபார்க்கப் பயணிகளைத் தொந்தரவு செய்யக் கூடாது.
5) 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசிக்கொண்டு செல்லக் கூடாது.
6) நடு படுக்கை இருக்கையில் உள்ள பயணிகள் 10 மணிக்கு மேல் படுக்க வேண்டும் என்றால் அதற்குக் கீழ் இருக்கை பயணிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது.
7) இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் உணவு டெலிவரி கிடையாது. ஆனால் காலை உணவை இரவே ஆர்டர் செய்யலாம்.
8) புகைப்பிடித்தல், மது அருந்துவது, எளிதில் பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்த புதிய விதிகளை மீறுவதைக் கண்டறிந்தால், பயணிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் பரிசோதகர், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்கள் ஆகியோரும் பயணிகளுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயணிகள் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்க வழிநடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.