இந்தியா
2030 காமன்வெல்த், 2036 ஒலிம்பிக்: உலக விளையாட்டு மேடைக்கு இந்தியா தயாராகிறது – பிரதமர் மோடி!

2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 72வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கும் வாலிபால் விளையாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளதாகக் கூறினார்.
வாலிபால் என்பது தனிநபர் வெற்றிக்கான விளையாட்டு அல்ல; அணி ஒருமைப்பாட்டையும் சமநிலையையும் வலியுறுத்தும் விளையாட்டு என அவர் விளக்கினார். ஒவ்வொரு வீரரும் அணிக்காக விளையாடுவதால், அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை இந்த விளையாட்டு கற்றுத் தருவதாக கூறினார்.
“அணி வெற்றி பெற்றால், அதில் உள்ள அனைவரும் வெற்றி பெறுகிறார்கள். இதே போன்று, நாம் ஒன்றிணைந்து செயல்பட்டதால்தான் இந்தியா இன்று முன்னேறி வருகிறது,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாகவே இந்தியா உலக விளையாட்டு அரங்கில் முக்கிய இடத்தை நோக்கி பயணிக்கிறது என்றார்.
மேலும், வாரணாசியில் தேசிய வாலிபால் போட்டி நடத்தப்படுவது, அந்த நகரத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “வாரணாசியை உணர வேண்டுமென்றால், அங்கே நேரில் வர வேண்டும் என்ற பழமொழி உண்டு. இப்போது நீங்கள் அனைவரும் வாரணாசிக்கு வந்துள்ளதால், அதன் கலாச்சார சிறப்பை உணர முடியும்,” என கூறினார்.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கான உள்கட்டமைப்புகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும், இது எதிர்காலத்தில் இந்தியாவை ஒரு முக்கிய விளையாட்டு மையமாக மாற்றும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.












