இந்தியா
சட்டத்தை விட பெரியது எதுவுமில்லை: நாளையும் தொடர்கிறது பிபிசி ரெய்டு..!
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை செய்த நிலையில் நாளையும் இந்த சோதனை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்த ஆவண படத்தை பிபிசி வெளியிட்டது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்திய நிலையில் இன்று திடீரென பிபிசி நிறுவனத்தின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு குறித்த புகார் வந்துள்ளதாகவும் அதனால் தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் பிபிசி ஆவணப்படத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் காட்டியுள்ளன.
இந்த நிலையில் இன்று நடந்த சோதனை நாளையும் தொடரும் என வருமானவரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 60 முதல் 7 0 பேர் கொண்ட குழு பிபிசி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் தேடுதல் வேட்டையை நடத்தியதாகவும் அனைத்து ஊழியர்களின் தொலைபேசிகள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அனைத்து லேப்டாப்புகளும் கைபற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் அதே நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் வீட்டிலிருந்து பணி செய்பவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அலுவலகத்தில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியே உள்ளவர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை ஆய்வு செய்து வருவதற்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பிபிசி முறைகேடுகள் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் டெல்லியில் உள்ள பிபிசி வளாகத்தில் லாப நோக்கத்தை கருத்தில் கொண்டு சில முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமானவரித்துறை அவ்வப்போது ஆய்வு நடத்தியதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் தகுந்த ஆதாரத்துடன் தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் சட்டத்தை மிஞ்சியது எதுவும் இல்லை என்றும் பாஜக இந்த சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலங்களில் நடத்தப்பட்டு வரும் வருமானவரித்துறை சோதனைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சோதனை குறித்து காங்கிரஸ் கட்சி கூறிய போது ’ஊடகங்கள் ஒடுக்கப்படுவதாகவும் இது மிகவும் துரதிஷ்டமானது என்றும் இங்கு ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. பிபிசி குறிப்பிட்ட ஆவண படத்தை வெளியிட்டதால்தான் அவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பிபிசியில் நடந்த ரெய்டு இந்தியா தனது ஜனநாயக பாதையை இழந்து வருகிறது என்பதை தெரிவிக்கிறது என்றும் இந்தியாவின் ஜனநாயகம் முற்றுகையிடப்பட்டுள்ளது என்றும் சிவசேனா கட்சி தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.