இந்தியா
டிஜேவின் அதிக சத்தத்துடன் கூடிய இசை.. மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகன்..!
திருமணத்தில் டிஜேவின் அதிக சத்தத்துடன் கூடிய இசை காரணமாக மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மர்கி என்ற மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகன் சுரேந்திர குமார் திருமணத்திற்கு தயாராகி மணமேடையில் உட்கார்ந்து இருந்தார்.
இந்த நிலையில் திருமண விழாவில் டிஜேவின் இசை இசைக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் டிஜேயின் இசை அதிக சத்தத்தில் இருந்ததை அடுத்து சுரேந்திர குமார் அதை அசெளகரியமாக உணர்ந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் டிஜே இசை குறித்து புகார் அளித்ததாகவும் சத்தத்தை குறைக்கும் படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
ஆனால் டிஜே குழுவினர் சத்தத்தை குறைக்காமல் தொடர்ந்து அதிக சத்தத்துடன் இசைத்ததை அடுத்து திடீரென மணமகன் சுரேந்திர குமார் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனை அடுத்து மணமகன் சுரேந்திர குமார் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும்போது வழியில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திருமண விழாவில் ஒரு குறிப்பிட்ட டெசிமலில் தான் இசை இசைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் அதிக சத்தமுடைய டிஜே இசையால் மணமகனின் தந்தை இறந்தார் என்பதும் 65 வயதான அந்த நபரின் பரிதாப முடிவு திருமண வீட்டாரை கதிகலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குஜராத்தில் உள்ள ஒரு மணமகள் டிஜே இசை காரணமாக மாரடைப்பால் உயிரிழந்தார் என்றும் இதனை அடுத்து அந்த இறந்த மணமகளின் தங்கைக்கு அதே மேடையில் அதே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.