தமிழ்நாடு
வேதாரண்யத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல்!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தையே அச்சத்தில் வைத்திருந்த கஜா புயல் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நாகை, வேதாரண்யத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
அதிகாலை 2.30 மணியளவில் கஜா புயல் நாகை, வேதாரண்யம் இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். நாகையில் கஜா புயலினால் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தது. ஏராளமான மரங்கள் கீழே விழுந்துள்ளன. பயிர்கள் நாசமாகியுள்ளன.
மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்தது குறிப்பாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்தான் கஜா புயலின் கோரத்தாண்டவம் அதிகம் என்று கூறப்படுகிறது. மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் திருத்துறைப்பூண்டியில் காற்று வீசியதாக கூறப்படுகிறது. தாங்கள் உயிர் பிழைத்தே பெரிய விஷயம் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.
வீட்டின் கதவுகளுக்குப் பெஞ்சுகளையும், அரிசி மற்றும் நெல்மூட்டைகளை முட்டுக் கொடுத்தும், சில வீடுகளில் ஆண் பெண் எல்லோருமாகச் சேர்ந்து கைகளால் தாங்கிப் பிடித்தும் புயல் பாதிப்பின்போது மக்கள் வீட்டுக்குள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். 1993-க்கு பின்னர் வந்த கொடூர புயல் இது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.



















