இந்தியா
25,000 இலவச டோக்கன்களை வாங்க குவிந்த 50,000 பக்தர்கள்: திருப்பதியில் பலர் படுகாயம்!
திருப்பதியில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை பெற 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் மட்டுமே தரப்படுகின்றன. இந்த நிலையில் நாளைய தரிசனத்திற்கான 25 ஆயிரம் இன்று தரப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்காக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் டோக்கன் கவுண்டர்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் காயமடைந்ததாகவும் அதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து இன்றைய இலவச தரிசன டோக்கன்கள் காலியாகி விட்டது என்றும் நாளை மறுநாள் தரிசனத்திற்கான டோக்கன்கள் நாளை காலை வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். இதனால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச தரிசன டோக்கன்களை முழுக்க முழுக்க ஆன்லைனில் வழங்கப்பட்டால் இந்த பிரச்சனை இருக்காது என்றும் நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.