தமிழ்நாடு
’ஜெய்பீம்’ பாணியில் போலீசார் துன்புறுத்தல்: பழங்குடியின மக்கள் புகார்
ஜெய்பீம் பாணியில் தங்களை போலீசார் பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெய்பீம் திரைப்படத்தில் பொய்யான வழக்கு போட்டு பழங்குடியின நபரொருவரை துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜெய்பீம் பட பாணியில் பொய்யான திருட்டு வழக்குகள் போட்டு எங்களை போலீசார் துன்புறுத்துவதாக திருவண்ணாமலை மாவட்டம் புலிவால் என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார் .
உத்தரமேரூரில் நடந்த நகை திருட்டு சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றதாகவும் தற்போது தனது கணவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று ராஜாக்கிளி என்பவரின் மனைவி சங்கீதா என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
ஆனால் தாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ராஜாக்கிளி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து வழக்கறிஞர் பிரபா என்பவரின் உதவியோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.
இதன்படி 15 நாட்களுக்கு முன்னர் ஒரு வீட்டில் 15 பவுன் நகை திருடப்பட்டது. இந்த திருட்டு குறித்து விசாரித்தபோது திருடப்பட்ட நகைகளை ஒரு நகைக் கடையில் அடகு வைக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த நகைகளை மீட்ட போது ராஜாக்கிளி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் நள்ளிரவு நேரத்தில் அந்த பகுதியில் உள்ள ஆண்களை அழைத்து செல்வதாகவும் பழங்குடி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருட்டு வழக்குகளை தங்கள் மீது பொய்யாக சுமத்துவதாக அவர்கள் புகார் அளித்துள்ளதாக. அதுமட்டுமின்றி திருடப்பட்ட நகைகளுக்காக தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்து இருந்த நகைகளையும் அடாவடியாக போலீஸார் பறிமுதல் செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.