தமிழ்நாடு
95 லட்சம் ரூபாய்க்கு நிலம்… மலைக்க வைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு திருட்டு விசாரணை!

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன் நகையுடன் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மலைக்க வைக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

#image_title
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் லாக்கரில் இருந்த பல லட்சம் மதிப்பிலான 60 சவரன் தங்கம் மற்றும் வைரம் நகைகளை காணவில்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். ஐஸ்வர்யா தனது புகாரில் வீட்டில் வேலைசெய்யும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஐஸ்வர்யாவின் புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் பணிபுரியும் 3 நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் மந்தைவெளியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் நகையை திருடியது அம்பலமானது. அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
அவர், 2019-ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளார். அதன் மூலம் வந்த பணத்தில், அண்மையில் சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்க வங்கியில் கடன் வாங்கியதை இரண்டே ஆண்டில் கட்டி முடித்துள்ளார். இந்த சூழலில் 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்ற அவரை கைது செய்த போலீசார் மேலும் வேறு யாரிடமாவது திருடியுள்ளாரா என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.