இந்தியா
பீர், பிரியாணி, மாணவிகள் மொபைல் நம்பர் கேட்டு டார்ச்சர்: பொறியியல் மாணவர் தற்கொலை!

ஆந்திராவில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

#image_title
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ ஒருவரால் பொறியியல் கல்லூரி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. அங்கு பிரதீப் என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவராத்திரி அன்று உறவினர் வீட்டுக்கு வந்த பிரதீப் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பிரதீப் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமை தான் என மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: கல்லூரியின் மூத்த மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு வெளியே உள்ள சிலர் எங்கள் மகனுடன் படிக்கும் மாணவிகளின் மொபைல் நம்பரை கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். பீர், பிரியாணி வாங்கி வரும்படி சொல்லி மொபைல் ஃபோனையும் பறித்தும் உள்ளனர். இதுபற்றி நாங்கள் ஆசிரியர்களிடம் கூறினோம். ஆனால் அதன் பின்னர் தான் ராகிங் அதிகரித்தது.
கல்லூரி நிர்வாகத்திடம் கல்லூரியில் இருந்து விலகுவதற்கான சான்றிதழை கேட்டும், அது நடக்கவில்லை. விடுதி அறையில் இருந்து வெளியேறினாலே, தேர்வு எழுத முடியாது, கொலை செய்துவிடுவோம் என மிரட்டப்பட்டார் பிரதீப். இதனால் பயந்து போன பிரதீப் தற்கொலை செய்து கொள்வான் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்கள். போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.























