தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மனுக்கள் ஏற்பு: அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 5002 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வந்துள்ள தகவலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவும், கோவில்பட்டியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனுவும் ஏற்பு என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை அவர் தனது வேட்புமனுவில் மறைத்துள்ளதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.