கிரிக்கெட்
செம டென்ஷனில் தோனி: வேறு கேப்டன் கீழே விளையாட நேரிடும் என எச்சரிக்கை!
நேற்று நடந்த லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்ற போதிலும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களால் கடுப்பான தோனி அவர்களை எச்சரித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் 13 வைடுகளும் 3 நோபாலும் வீசியுள்ளனர். மேலும் பந்து வீசுவதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதனால் கோபமடைந்த தோனி ஆட்டம் முடிந்த பின்னர் பேசுகையில், வேகப்பந்து வீச்சாளர்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆடுகள தன்மைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப பந்து வீச வேண்டும். ஃபீல்டர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்களோ பந்து அங்கே செல்லும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
எதிர் அணி எப்படி செயல்படுகிறது என்பதை கவனித்து அவர்களின் யுக்திகளை அறிந்து செயல்பட வேண்டும். இந்த ஆட்டத்தில் கூடுதலாக நோபால், வைடுகளை வீசியது சரியில்லை. நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது எச்சரிக்கை. இல்லையென்றால் நான் வெளியேறிவிடுவேன் என்றார் தோனி.