இந்தியா
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த ஒரே நீதிபதி: தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!
மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது என்பதும் அதன் காரணமாக அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இது குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று காலை அறிவித்தது என்பதும் அதில் நான்கு நீதிபதிகள் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்த நிலையில் ஒரே ஒரு நீதிபதி மட்டும் இந்த கருத்தில் இருந்து மாறுபட்டு தீர்ப்பை அளித்துள்ளார் .
பணமதிப்பிழப்பு தொடர்பான தீர்ப்பில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி நாகரத்தினம் என்ற பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது தீர்ப்பில் ’பாராளுமன்றம் என்பது நாட்டின் ஒரு அங்கம் என்றும் ஜனநாயகத்தின் மையப்புள்ளியாக விளங்கும் பாராளுமன்றத்தில் பணமதிப்பிழப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை விவாதிக்காமல் ஒதுக்கி வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் தகவல்களை பார்க்கும்போது மத்திய அரசு விரும்பியபடி என்ற வார்த்தைகள் உள்ளதால் இதில் ரிசர்வ் வங்கிக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாக காட்டுகிறது என்றும் இந்த முழு முயற்சியும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடம் கருத்து மட்டுமே கேட்கப் பட்டது என்றும் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்யவில்லை என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் எடுக்கப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் ஆனால் இந்த நேரத்தில் பழைய நிலையை மீட்டெடுக்க முடியாது என்றும் இப்போது என்ன நிவாரணம் கொடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நடவடிக்கை நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என்றும் கருப்பு பணம், பயங்கரவாத நிதி மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க திட்டமிடப்பட்டது என்று கூறினாலும் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து தீர்ப்பளித்த நிலையில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தீர்ப்பை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.