தமிழ்நாடு
சொந்த விருப்பத்தின்பேரில் பாலியல் தொழில் செய்தால் நடவடிக்கை வேண்டாம்: நீதிமன்றம்
சொந்த விருப்பத்தின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிந்ததரிபேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அப்போது மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்த போது நீதிபதி கூறிய போது பாலியல் தொழிலாளர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் தொழில் செய்யும் போது அது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்றும் பாலியல் தொழிலுக்கான விடுதிகள் நடத்துவதுதான் சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் பாலியல் தொழிலாளியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறினார்.
இந்த நிலையில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாகவும் அது அடிப்படையில் சட்டப்படி குற்றம் என்றும் காவல்துறையினர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அவர் தன்னுடைய தீர்ப்பில் விபச்சார விடுதிகளுக்கு செல்லும் காவல்துறையினர் பாலியல் தொழிலாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தொழில் செய்தால் அவர்களை கைது செய்யவும் துன்புறுத்தவும் கூடாது என்றும் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் கூறியிருந்தார். வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது தனிப்பட்ட வகையில் நடவடிக்கை எடுப்பதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.