உலகம்
இந்தியாவை போல பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நைஜீரியா.. நிர்வாணமாக போராட்டம் செய்யும் பொதுமக்கள்..!

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இன்றுவரை எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரும் குற்றமாக கூறிவரும் நிலையில் இந்தியாவை போலவே ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவிலும் சமீபத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலர் நிர்வாணமாக வங்கிகளில் சென்று போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் கடந்த அக்டோபர் மாதம் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. நைஜீரியா கரன்சிகளான 200, 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து பழைய நோட்டுக்களை வங்கிகளில் ஒப்படைக்க கடைசி நாள் ஜனவரி 31 என்றும் அதன் பின் பிப்ரவரி 20 வரை அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பழைய நாணயத்தை சில வணிக நிறுவனங்கள் ஏற்க மறுப்பதால் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், வங்கியில் பணம் எடுப்பதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் வங்கியில் பணம் எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் மேலும் வங்கிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கோபமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொதுமக்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி வருவதாகவும் சில வங்கிகளுக்குள் நிர்வாணமாக பொதுமக்கள் நுழைந்து தங்களுடைய கணக்கை முடிக்குமாறு ஆவேசமாக வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நைஜீரிய நாட்டின் ஜனாதிபதி முகமது புகாரி என்பவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷமும் எழுப்பப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரம் செய்து வருவதாகவும் பல இடங்களில் பதட்ட நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. பல போராட்டக்காரர்கள் தங்களை நிர்வாணப்படுத்திக்கொண்டு சாலைகளிலும் வங்கிகளிலும் நிர்வாணமாகவே போராட்டம் நடத்தி வருவது தான் போராட்டத்தின் உச்சம் என்று கூறப்படுகிறது.

நைஜீரியாவில் 40% மக்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்ற நிலையில் வங்கியில் சென்று கணக்கில் பழைய செல்லாத நோட்டுகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புழக்கத்தில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் பணவீக்கத்தை சமாளிக்கவும் கள்ள நோட்டை தடுப்பதற்காகவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நைஜீரியா அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












