இந்தியா
இந்தியாவில் கொரோனாவின் Triple Mutation வகை; வருகிறது அடுத்த ஆபத்து

நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2,000 பேர் இறந்துள்ளார்கள். கொரோனா தொற்று ஆரம்பித்தது முதல் இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேர் இத்தொற்று காரணமாக மரணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில் ‘டிரிபிள் மியூடேஷன்’ என்னும் புதிய வகை கொரோனா பரவல் நாட்டில் சில இடங்களில் உருவாகியுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தப் புதிய வகை கொரோனா மூலம், மூன்று வகை கோவிட் வைரஸ்கள் இணைந்து புதிய வகை தொற்றாக உருவெடுத்துள்ளதாக தகவல். இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் கடுமையானதாக மாற்றும் என்று அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்திய அளவிலும், உலக அளவிலும் கொரோனாவில் அதிவேகப் பரவலுக்கு காரணம் இப்படி தொற்று உருமாறி பரவுவது தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய வகை கொரோனா தொற்றை, தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் சமாளிக்குமா என்கிற முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது. பொதுவாக வைரஸ் தொற்றானது, அதிகமாக பரவும் போது, புதிய உரு கொண்டு இன்னும் வீரியமாக பரவப் பார்க்கும். அந்த நிலையில் தான் தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளது. எனவே, டிரிபிள் மியூடேஷன் கொரோனா தொற்றும் அதிவேகமாக பரவ வாய்ப்புள்ளது. இந்தப் புதிய கொரோனா, தடுப்பு மருந்துகளைத் தாண்டியும் உடலில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதன் தாக்கம் மற்றும் வீரியம் எந்தளவுக்கு இருகுகம் என்பதை இப்போது கணித்து சொல்லி விட முடியாது என்று விஞ்ஞஞானிகள் கூறுகின்றனர்.






















