தமிழ்நாடு
ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா கொண்டு வர முடிவு செய்துள்ளதை அடுத்து தமிழக திரை உலக பிரபலங்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா, கார்த்தி, விஷால், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ராஜூமுருகன், பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைத்தளத்தில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை திரையுலக பிரதிநிதிகளாக கார்த்தி, ரோகிணி, உள்பட ஒருசில சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வைக்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசு இதற்கு உதவி செய்வதாக முக ஸ்டாலின் உறுதி அளித்ததாகவும் நேற்று நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒளிப்பதிவு திருத்த சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தில் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று, இந்த மசோதா மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலக பிரதிநிதிகள் நேற்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கைக்கு உடனடியாக முதல்வர் செவிசாய்த்து, மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியதற்கு திரையுலகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு வருகிறது.




















