தமிழ்நாடு
சர்ச்சைப் பேச்சு முன்னாள் ராணுவ வீரர் மீது பாய்ந்தது வழக்கு!
கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மிரட்டும் தொணியில் பேசினார். இதனையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று சென்னை திருவல்லிக்கேணியில், கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், பாஜக பட்டியலின அணி நிர்வாகி தடா பெரியசாமி கார் மீது தாக்குதல் நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன், எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும், துப்பாக்கியால் சுடவும்தெரியும், அதை செய்ய வைக்காதீர்கள் என தமிழக அரசை மிரட்டும் தொணியில் பேசினார். இவரது இந்த சர்ச்சை பேச்சும் அதனை தொடர்ந்த செய்தியாளர் சந்திப்பும் வைரலாக பரவியது. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதால் தமிழக அரசை எச்சரிக்கிறேன். எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிட வேண்டாம். இனிமேலும் இது நடந்தால் நாங்கள் செய்வோம் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.
இவரது இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது. இவர் மீது வழக்கு பதிவு செய்ய பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.