இந்தியா
ஒரே ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய மணமகன்.. மணமகள் வீட்டார் கொடுத்தது எத்தனை லட்சம் தெரியுமா?
வரதட்சனை என்பது காலங்காலமாக இருந்துவரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் ஒரே ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்தியாவில் வரதட்சணை என்பது சர்வசாதாரணமாக நிலவி வரும் ஒரு வழக்கம் என்பதும் மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்கும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தங்கள் வசதிக்கேற்ப வரதட்சணை கொடுத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வருவாய் துறை அதிகாரியின் மகன் சவுகான் என்பவரின் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த திருமணத்தின்போது வரதட்சணை குறித்து எதுவும் பேசாத நிலையில் மணமகளின் வீட்டார் திருமண தினத்தன்று மணமகன் வீட்டாருக்கு ரூபாய் பதினோரு லட்சம் நகை மற்றும் பணத்தை வரதட்சணையாக அளித்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட மணமகன் அதிலிருந்து ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்து பணத்தையும் நகையையும் மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்தது மணமகள் உள்பட அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.
தங்கள் குடும்பத்திலுள்ள யாருக்கும் வரதட்சணை வாங்கும் பழக்கம் கிடையாது என்றும் உங்கள் திருப்திக்காக ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று மணமகன் கூறியதை கேட்டு மணமகள் வீட்டார் ஆச்சரியமடைந்தனர். மேலும் இதுகுறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவி வரும் நிலையில் மணமகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.