இந்தியா
ஆப்கன் விவகாரத்தால் ஐதராபாத் பிரியாணி விலை உயர்வு!
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த விவகாரம் காரணமாக இந்தியாவில் பிரியாணி விலை ஏறி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே நடைபெற்று வந்த போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ளனர். காபூல் உள்பட அனைத்து ஆப்கன் நகரங்களும் தற்போது தாலிபான்கள் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அங்கிருந்து ஏற்றுமதியாகும் பல பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் உலர் பழங்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தாலிபான்கள் தற்போது பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் பழங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக ஹைதராபாத் பிரியாணி உள்பட அனைத்து வகை பிரியாணிகளுக்கும் உலர் பழங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருந்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழியாக உலர்பழங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளதால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய தீவிர ஆலோசனை செய்து வருவதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி சேர்ந்த உலர்பழங்கள் வணிகர் ஒருவர் கூறியபோது ஆப்கானிஸ்தானிலிருந்து கிடைத்து வந்த வால்நட் மற்றும் பாதாம் ஆகியவை தற்போது வரத்து இல்லை என்பதால் அதன் விலை கடந்த சில நாட்களில் பல மடங்கு அதிகரித்திருப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பிரச்சனை காரணமாக ஹைதராபாத் பிரியாணி விலை உயர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.