தமிழ்நாடு
புது புயலுக்கு நிறைய வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்!

சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இது புயலாக மாற வாய்ப்புள்ளது என்றுள்ளார். மேலும் இதன் வலிமை என்ன, கஜா புயல் போல இருக்குமா என்றும் விளக்கம் அளித்து இருக்கிறார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன. அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக்கூடாது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.
















