தமிழ்நாடு
பேரறிவாளன் நிரபராதி என்று உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை: அண்ணாமலை
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தாலும் அவரை நிரபராதி என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என்று எங்கேயும் பேரறிவாளனை குறிப்பிடவில்லை என்றும், நிரபராதிகளை விடுதலைச் செய்தது போல் முதல்வர் கொண்டாடுகிறார் என்றும் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் மிக மிக நுணுக்கமான தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்கிறது என்றும் ராஜீவ் காந்தி வழக்கு விவகாரத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்திருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றும் தெரிவித்தார்.
சரித்திரத்தை நாம் மறக்கக் கூடாது என்றும் நமது மண்ணில் என்ன நடந்தது என்பதை மறக்கக் கூடாது என்றும் அமைச்சரவை எடுத்த முடிவை ஏற்று ஆளுநர் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.