தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கு ஃபோன் போட்ட அண்ணாமலை: என்ன பேசினார் தெரியுமா?

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#image_title
தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் மின்னல் வேகத்தில் உடனடியாக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவித்து அவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வார்த்தை போரில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டரில், இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.