தமிழ்நாடு
கடுப்பேற்றிய ஓபிஎஸ், வெறுப்பாகி வெளியேறிய ஈபிஎஸ்: சட்டசபையில் அதிமுக அமளி!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்து பேசியதற்கு ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

#image_title
இன்று சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கொண்டு வந்து பேசிய முதல்வர், மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இதனை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது.
அப்போது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதன் பின்னர் ஓபிஎஸ் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என பேசினார். இவரது பேச்சால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டுமே பேச அனுமதி என்று இருக்கும் போது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசிவிட்ட நிலையில் வேறு ஒருவரை பேச அனுமதித்தது வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் பேச அனுமதித்ததாக கூறினார். இதனை ஏற்க மறுத்த அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.