சினிமா செய்திகள்
என்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருக்கின்றார்கள்: மீராமிதுன் ஜாமின் மனு!

என்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதால் என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என நடிகை மீரா மிதுன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகை மீரா மிதுன் சமீபத்தில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வெளிவந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீரா மிதுன் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் அவருடைய ஆண் நண்பரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னைப் பற்றி அவதூறாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் போது வாய் தவறி சில வார்த்தைகள் குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசி விட்டதாக மீராமிதுன் தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருவதாகவும் எனவே தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் எனவே தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மீராமிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


















