சினிமா செய்திகள்
மீண்டும் இணையும் விஷால்- ஹரி கூட்டணி?

நடிகர் விஷால் மற்றும் ஹரி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டணி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டப் பலரும் இதில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பின் போது தீ விபத்து ஏற்பட்டு, அதில் நூலிழையில் விஷால் உயிர் தப்பித்ததாகவும் வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த படத்தை தொடர்ந்து விஷால் இயக்க இருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் ஹரி மீண்டும் விஷாலுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘தாமிரபரணி’, ‘பூஜை’ போன்ற படங்களில் ஹரி மற்றும் விஷால் கூட்டணி இணைந்தது.
இந்தப் படங்கள் கமர்ஷியல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது மீண்டும் இவர்கள் ஆக்சன் கதைக்களத்தில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. விஷாலின், ‘வீரமே வாகை சூடும்’, ‘லத்தி’ போன்ற படங்கள் ஆக்ஷன் கலந்த கதையாக அமைந்திருந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடையே பெறவில்லை.
இதனால் தனது வழக்கமான பாணியில் முழுக்க முழுக்க ஆக்சன் களத்தில் வெற்றி படங்களை தந்த ஹரியுடன் இணைய இருக்கிறார் விஷால். இந்த வருடம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இதற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.