சினிமா செய்திகள்
பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசு: பிரபல நடிகர் அசத்தல்
மார்ச் 8ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலகினரும் பலர் தங்கள் சமூக வலைதளங்களில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெய் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடித்த ‘வீரபாண்டியபுரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது அவர், ‘எண்ணித்துணிக, குற்றமே குற்றம்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் செய்தியாளர்களுக்கு அழகிய பட்டுப்புடவைகளை பரிசாக வழங்கி நடிகர் ஜெய் ஆச்சரியம் அளித்துள்ளார். மேலும் அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சகோதரி ஆகியோர்களை அனுப்பி ஒவ்வொரு செய்தியாளர்களுக்கும் அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகர் ஜெய் கூறியபோது, ‘ பெண் பத்திரிகையாளர்களை நம் குடும்பத்தில் சகோதரிகளில் ஒருவராக நான் பார்க்கிறேன். நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும் வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டதால் தான் இந்த பட்டுப்புடவைகளை பரிசாக அளித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.